Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோகனூரில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம்: வனத்துறை அமைச்சர் துவக்கம்

அக்டோபர் 31, 2023 06:16

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில், குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.உமா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், சர்க்கரை ஆலை  நிர்வாக இயக்குனர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்  கலந்து கொண்டு முதற்கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது, தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில்,  வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் நாவல் மரம், இலுப்பை மரம், புளிய மரம், மகாகனி மரம், நீர் மருது ஆகிய மரங்கள் தலா 250 வீதம், மொத்தம் 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

காற்றிலுள்ள மாசினைக் கட்டுப்படுத்தி, கார்பன்-டை ஆக்சைடு வாயுவின் அளவைக் குறைத்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், தேவையான அளவு மழைப் பொழிவைப் பெறவும் குறுங்காடுகள் உதவுகின்றன. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் மியாவாக்கி முறையாகும்.

இந்த முறையில், குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும்.. மியாவாக்கி முறையினால் 10 ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ அந்த வளர்ச்சி, இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்து விடும், 

பொதுவாக இந்த முறையில் மரங்கள் இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும். கிராமப் புறங்களில் உள்ள பஞ்சாயத்து அல்லது புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து அதில் குறுங்காடுகளை உருவாக்கலாம் அல்லது பஞ்சாயத்து ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்காத பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அந்த இடங்களில் குறுங்காடுகளை உருவாக்கலாம். குறுங்காடுகள் உருவாக்குவதால் பல உயிரினங்கள் பயனடையக் கூடும். 

மேலும் அரசு, தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான காலி நிலங்கள் இருப்பின் அவற்றிலும் குறுங்காடுகளை அமைக்கலாம். மேலும், இந்த மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டு மென அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், துணைத் தலைமை பொறியாளர் செங்குட்டுவன், துணைத் தலைமை ரசாயனர் சந்திரசேகரன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்